நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் ; சென்னை அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்….

நீட் தேர்வுக்கு எதிராக முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொள்கிறார்.

இது தொடர்பாக எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக நடந்த பொதுநல வழக்கொன்றில், உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அளித்துள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில், சட்ட நகல் எரிப்புப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நீட் தேர்வுக்கு எதிராக இன்று அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுமென அறிவித்துள்ளார். முற்போக்கு மாணவர் கழகத்தைச் சார்ந்த பொறுப்பாளர்களும் மாணவர்களும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் இணைந்து இப்போராட்டத்தை வெற்றிகரமாக ஒருங்கிணத்திட வேண்டுமென எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *