காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பான அரசாணை பிறப்பித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கில் மாநிலங்கள் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது நதிநீர் பிரச்சனைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் என்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை முடிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது, மத்திய அரசின் தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தனர். 2013 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.