தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.
இந்நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை அறவழி கண்டன போராட்டம் நடத்துகிறது.
திரைத்துறையினர் முன்னெடுத்த இந்த அறவழி போராட்டத்துக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசியலில் முழு வீச்சில் செயல்படும் ரஜினிகாந்த், கமல் ஆகியோர் காலை 11.30 மணிக்கு போராட்ட களம் வந்தடைந்தனர். ரஜினிக்கும் ,கமலுக்கும் இடையே அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் போராட்ட களத்திற்கு வந்த ரஜினியும் , கமலும் அருகருகே அமர்ந்து போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.
நடிகர் சங்கம் நடத்தும் இப்போராட்டத்தை நடிகர் சங்கத்தலைவர் நாசர் காலை 9 மணிக்கு தொடங்கிவைத்த நிலையில் நடிகர் விஜய் போராட்டம் துவங்கும் முன்னரே போராட்டக்களத்துக்கு வந்தடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது