தேசதுரோக வழக்கில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது

தமிழ் செய்தி உலகில் மூத்த பத்திரிக்கையாளராக கருதப்படும் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆவார். இவர் ஆட்டோ ஷங்கர் முதல் வீரப்பன் வாழ்க்கை சம்பவங்கள் வரை அனைத்தையும் புலனாய்வு செய்து அதனை நக்கீரன் இதழில் வெளியிட்டதன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு கோபால் பிரபலமானார். இந்நிலையில் இவரை இன்று விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். புனே செல்ல அவர் விமான நிலையம் வந்த போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தார்.

முதற்கட்ட தகவலின்படி தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நக்கீரன் இதழில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்ததாகவும், அதில் ஆளுநர் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பாக அளித்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் அவரை தேசதுரோக வழக்கில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *