இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த, தென்னாப்பிரிக்க அணி 32.2வது ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சகால் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது.
2018-02-05