தமிழகம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்களால் முன்னெடுக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் திட்டமிட்டு முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள், தமிழகத்தில் தொடர்ந்து வெறுப்பு பேச்சுகளை உமிழ்ந்து வரும் பாஜகவின் எச்.ராஜா, கருப்பு முருகானந்தம் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை, நிருபர்கள் சங்கத்தில் காலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டமும், அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வேணுகோபால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், தமிழ்தேச மக்கள் இயக்கத்தின் தோழர் தமிழ்நேசன்,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஜாக், தோழர் அருள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் டாக்டர் தொல்.திருமாவளவன் கூறுகையில்:-
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் சங்பரிவார் அமைப்பை சார்ந்தவர்களின் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து அவ்வமைப்புகளின் தலைவர்கள் இஸ்லாமியர்களையும், கிருஸ்தவர்களையும் குறிவைத்து பேசி வருகின்றனர்.
பாஜகவின் முண்ணனி தலைவர்களில் ஒருவராக இருக்கும் எச்.ராஜா பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களை தொடர்ந்து அவமதித்து பேசி வருகிறார். ஆனால், தமிழக அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.
அண்மையில் புதுக்கோட்டையில் எச்.ராஜா காவல்துறையையும் நீதிமன்றத்தையும் கொச்சை படுத்தி பேசி உள்ளார். அவரை 24 மணி நேரத்தில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அல்லது தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டத்தில் சிறைபடுத்த வேண்டும்.
விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இளைஞர்களை மூளை சலவை செய்து, இஸ்லாமியர்களின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வெறியூட்டப்பட்டு கலவரம் செய்ய சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இது அமைதியாக இருக்கும் தமிழகத்திற்கு உகந்தது அல்ல. இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறுகையில்:-
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை சார்ந்தவர்கள் தங்களின் அரசியல் வளர்ச்சிக்காக திட்டமிட்டு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பல மாதங்களாகவே எச். ராஜா, சுப்ரமணிய சாமி போன்றோரை அழைத்துக் கூட்டங்களை நடத்தி பெரும் கலவரத்தை திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டமிட்ட பரப்புரையில் அப்பாவி இந்து சகோதரர்கள் அவர்களின் திட்டத்திற்கு பலியாகியுள்ளனர்.
முஸ்லிம்கள் எதிர்தாக்குதல் நடத்தாததால் பெரும் அசம்பாவிதம் அங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. அதைபோன்றே தென்காசியிலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்கூட்டியே புகார் அளித்தும், எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரச்சினை ஏற்பட்டது முதல் களத்தில் நின்று அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து காவல்துறை உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுவந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையின் செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது.
கலவரப்பகுதிக்குள் வெளியூரிலிருந்து வந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய கருப்பு முருகானந்தத்தின் மீது ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கு காவல்துறை பதில் அளிக்க வேண்டும். அவரின் வன்முறை பேச்சு சமூக வலையத்தளங்களில் பரலாகிவருகிறது.
அதை போன்றே வந்தவாசியில் காவல்துறையின் முன்னிலையிலேயே பள்ளிவாசல்மீது தாக்குதல் நடத்தியும், அராஜகத்திலும் ஈடுபட்ட இந்து முன்னணி கலவர கும்பலை தடுக்கத்தவறிய காவல்துறை, இந்து முன்னணியினரை கைது செய்ததோடு அவர்களை திருப்திப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் நகர செயலாளரை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஒவ்வொரு நாளும் இந்து சகோதரர்கள் நடத்தும் ஆயிரக்கணக்கான திருவிழாக்களும், ஊர்வலங்களும் அமைதியாக நடக்கும்போது, அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத போது விநாயகர் சதுர்த்தியில் மட்டும் கலவரங்களும், பதட்டங்களும் உருவாவது ஏன்? என்பதை இந்து சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும், கலவரம் நிகழ்த்துவதற்காகவும் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கும்பலால் உருவாக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் இதைவைத்து வசூல் செய்து பணம் சம்பாதிப்பதையும், மார்வாடிகள் பெருமளவுக்கு உதவி செய்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
2019 தேர்தலை மனதில் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினர் இவ்வருடம் விநாயகர் சதுர்த்தியை கலவரமாக்க திட்டமிட்டுள்ளனர். எச். ராஜா புதுக்கோட்டையில் ஆடிய சாமியாட்டத்தை பார்த்தாலே அது தெரியவரும்.
நம்மை இந்த அரசும், காவல்துறையும் ஒன்றும் செய்யாது என்ற திமிர்த்தனமே எச். ராஜா வகைராக்களை எல்லை மீற வைக்கிறது.
அமைதியை நாடும் இந்து சகோதரர்களும்–ஜனநாயக, மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் தமிழகத்தின் அமைதியை பாதுகாக்க களமிறங்க வேண்டிய தருணமிது. இவ்வாறு கூறினார்.
மேலும், பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் தோழர் சுப.உதயகுமார் கூறுகையில்:-
பாஜகவின் தலைவர் தமிழிசை சௌதர ராஜன் முன்னிலையில் “பாசிச பாஜக ஒழிக” என முழக்கமிட்ட மாணவியை விசாரணையின்றி கைது செய்த காவல்துறை தொடர்ந்து தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் பேசியும், வெறுப்பூட்டும் கருத்துக்களை சமூகம் வலையதளங்கள் மூலம் பரப்பியும் வரும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோரை கைது செய்ய தயங்குவது ஏன்?
தொடர்ந்து தமிழகத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் பேசி வருபவர்களை கண்டிக்க தவறி மௌனமாக இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல் கண்டிக்கத்தக்கது. என்று கூறினார்.