திண்டுக்கல் மேட்டுப்பட்டி அமிர்தம் காடு தெருவை சேர்ந்தவர் ஜான்கென்னடி. இவரது மகன் ராபின் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராபினுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் ராபினுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராபின் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் 6 வயது மகள் யாழினி, டெங்கு காய்ச்சலால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்த சம்பவம் நகலூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறுதிக்கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு வருவதால் எளிதில் குணப்படுத்த முடிவதில்லை என்றும் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.