தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக இன்று முதல் புதுப்படம் வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்படத் துறை ஏற்கனவே திருட்டு விசிடி முதற்கொண்டு, அண்மையில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவுக் கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10 சதவீத கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டும் தொடர்ந்து ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி கேளிக்கை வரியை தமிழ்ப் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.