தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கவுள்ளார். இதையொட்டி, அவர் இன்று சென்னை வருகிறார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. இதையடுத்து, தமிழகத்துக்கு மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து, அசாம் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், இன்று பிற்பகல் சென்னை வருகிறார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்கவுள்ளனர். இதைத்தொடர்ந்து, நாளை காலை 9.30 மணிக்கு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்