டெங்கு காய்ச்சலுக்கு அக்டோபர் 9ம்தேதி வரை 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் முதியவர் வரை பலர் இறந்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதால், மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், கடந்த 9ம் தேதிவரை, டெங்கு காய்ச்சலால் 40 பேர் பலியாகியுள்ளனர் என்றும், டெங்கு காய்ச்சலுக்கு 11 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மலேரியாவுக்கு 8524 பேரும், சிக்கன் குனியாவுக்கு 85 பேரும், ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு 64 பேரும், எலி காய்ச்சலுக்கு 799 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் கண்ணன், டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த 5 ஆம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக்கூறி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கண்ணன், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் அஜீத்குமார் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மாணவர் அஜீத்குமாருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவர் அஜீத்குமார் உயிரிழந்தார்.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் கடந்த 2 வாரங்களில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிறுகுடல் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யாததால் காய்ச்சல் பரவுவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *