டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்படதற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த மாதம் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு விசாரணையின்போது, இருதரப்பிலும், உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, அரிமா சுந்தரம் உள்ளிடோர் ஆஜராகி காரசாரமாக வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி துரைசாமி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும் 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவித்து இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும், மறுஉத்தரவு வரும் வரை தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் நீதிபதி துரைசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர், அரசு தலைமை கொறடா, சட்டசபை செயலாளர் ஆகியோர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *