டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால் ; 18 தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலாளர் கடிதம்

முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அவர்களின் 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கடந்த மாதம் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 19 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதையடுத்து டிடிவி தினகரன் அணியிலிருந்து மாறிய ஜக்கையன், முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்தார். ஆனால், 18 எம்எல்ஏக்களும் சபாநாயகரை சந்தித்து நேரடியாக விளக்கம் அளிக்காமல், பெங்களூரு கூர்க் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள, 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் விதிகளின் கீழ், அதாவது கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதலின்படி, முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த 18 சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி இழந்த 18 எம்எல்ஏக்களின் பட்டியலில்,

ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன்,

அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகன்,

மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கென்னடி மாரியப்பன்,

பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு,

குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் ,

பாப்பிரெட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. பழனியப்பன்,

அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி,

பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா,

பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல்,

சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன்,

திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோதண்டபாணி,

பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஏ. ஏழுமலை,

தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி,

நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை,

ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். பாலசுப்ரமணி,

சாத்துர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி. சுப்ரமணியன்,

ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். சுந்தரராஜ் , விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியை காலி செய்ய வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *