அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 32 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 73 காசுகளாக இருந்தது. 2 நாட்களுக்குப் பின் இன்று அந்நியச் செலாவணி சந்தையில் இன்று மீண்டும் வர்த்தகம் தொடங்கிய போது, இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகமாக இருந்தது.
குறிப்பாக எண்ணெய் நிறுவனங்களுக்கான டாலர் தேவை அதிகரித்ததன் காரணமாக, வர்த்தகம் தொடங்கிய உடனேயே ரூபாயின் மதிப்பு மேலும் 42 காசுகள் அளவுக்கு சரிவடைந்து 72 ரூபாய் 15 காசுகளாக இருந்தது. பின்னர் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டு, 72 ரூபாய் 32 காசுகளாக சரிந்தது.
அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுவதும் ரூபாய் மதிப்பு வீழ்வதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ரூபாயின் மதிப்பு கடந்த ஆறாம் தேதி 72 ரூபாய் 11 காசுகளாக வீழ்ச்சி அடைந்ததே அதிகபட்ச வீழ்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.