தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக 18-ம் தேதி கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னையில், எழும்பூர், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, முகப்பேர், பாடி, அம்பத்தூர், பட்டாபிராம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், , விருகம்பாக்கம், அசோக்நகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதேபோல், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.