சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டப்பட்டால் செயல்படும் விதம் குறித்து ஆலோசிக்கவும், மேலும், குட்கா விவகாரம் தொடர்பாக என்ன முடிவு வெளியாகும்? என்றும், அதனை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்தும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.