சென்னை அருகே கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் அறை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ராட்சத இரும்பு கம்பிகளுடன் தடுப்பு சுவர் கட்டப்பட்டு, தளம் அமைக்கும் பணியில் 48 வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை இரும்பு ராட்சத தூண்கள் ஒரு பக்கமாக சரிந்து அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததில் 30 பேர் இடுபாடிகளில் சிக்கி கொண்டனர்.
உடனடியாக தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், போலீஸ் கமாண்டோ படையினர், மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவ துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
29 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, மதுரை மாவட்டம் கப்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக பணியாற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.