சிரியாவில் கிளர்ச்சிப்படை முகாம்கள் மீது ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 12 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 8- ஆண்டுகளாக அந்தப் போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்திற்கு பயந்து தென்மேற்கு பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் ஐன்-எல் தினா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தப் பள்ளிக்கு அருகில் கிளர்ச்சிப்படையினரின் முகாம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த முகாம்கள் மீது சிரியா ஆதரவு ரஷ்ய படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அந்த பள்ளியில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சிப்படைகளை விரட்ட சிரியா ராணுவத்தோடு ரஷ்யப்படைகள் சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்து வருவதால் தாக்குதலுக்கு அச்சமடைந்து ஏராளமான பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.