இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா. இவர் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளை யாடி வருகிறார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொள்வதால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளது. அதோடு அவரது ஆண்டு சம்பளத்தில் 20 சதவிகித்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை மண்ணில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடர் நடந்தது. இதில் பங்களாதேஷ்- இலங்கை அணிகள் மோதிய போட்டியின் போது வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குணதிலகா ஒழுங்கீனமாக நடந்து கொண்டாராம். இதே போல இந்திய அணி, கடந்த வருடம் இலங்கை சென்று விளையாடியது. அப்போது ஒழுங்கீன மாக நடந்து கொண்டார் என்று 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இருந்தாலும் என்ன மாதிரியான ஒழுங்கீன செயல்பாடுகளை செய்தார் என்பது பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது நைட் கிளப் சென்றுவிட்டு அணியுடன் தாமதாக இணைந்த ஜெஃப்ரி வாண்டர்சே என்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. இப்போது இன்னொரு இலங்கை வீரர் குணதிலகாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இலங்கை வீரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.