திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் சமையல் செய்பவராக பணியாற்றி வரும் பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சமையல் செய்யக்கூடாது என்று கூறி பள்ளியை திறக்க விடாமல் உள்ளூரை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு பாப்பாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.