ஒகி புயல் பாதித்த குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஒகி புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் டிசம்பர் 13ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனிடையே ஆவடி அருகே செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், புயலின் போது உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.