குஜராத் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் முடிவுற்றது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 9ம் தேதி 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து குஜராத் மாநிலத்தின் மத்திய மண்டலத்திலும், வடக்கு மண்டலத்திலும் உள்ள 93 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலையுடன் முடிவுற்றது. குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு கடைசி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி வித்தியாசமாக நீர்நிலைகளில் செல்லும் விமானத்தில் பயணம் செய்தார்.
இதனிடையே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.