காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
காவிரி நதிநீர்ப்பங்கீடு தொடர்பாக, நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமித்வராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். மாநிலங்கள் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசும் தனது வாதத்தை முன்வைத்தது. காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறை என்று தெரிவித்தது. இந்நிலையில், இன்று மத்திய அரசு தனது வாதத்தை நிறைவு செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.