கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் நிரம்பியுள்ளன. இந்த இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால், கர்நாடகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்றிரவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் வந்த நிலையில், தற்போது நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இன்று மாலைக்குள் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல் அருவியிலும் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.