காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுபேற்பார் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சுயசரித நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி எப்போது பொறுப்பேற்ப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இந்த கேள்வியை பல ஆண்டுகளாக செய்தியாளர்கள் கேட்பதாகவும், இப்போது, விரைவில் அது நடக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். 2004ஆம் ஆண்டு நேரடி அரசியலுக்கு வந்த ராகுல் காந்தி, 2007ஆம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்தார். 2013ஆம் ஆண்டு ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.