கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்ய போலீசார் அவரது வீட்டு முன் முகாமிட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வர நிர்மலா மறுத்து உள்ளேயே பதுங்கியுள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதால், நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தது.

இன்று காலை தேவாங்கர் கல்லூரி முன்பாக மகளிர் அமைப்புகளும், மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற வட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி. மதி, டி.எஸ்.பி. தனபால் உள்ளிட்டோர் பேராசிரியை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. மதி தலைமையிலான போலீசார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்று பேராசிரியையிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது, வீட்டுக்குள் இருந்து நிர்மலா தேவி வெளியே வர மறுத்துவிட்டார். இதனால் நிர்மலா தேவியின் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு அங்கு வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த உறவினர் வந்த பிறகு நிர்மலா தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் நிர்மலா தேவி வீடு முன்பு போலீசார் முகாமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *