ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி…

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

குமரி மாவட்டத்தை ஒகி புயல் கடந்த 30ம் தேதி தாக்கியதில் மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்களும் இந்த புயலில் கரை திரும்ப முடியாமல் மாயமானார்கள். இதையடுத்து மீனவர்களை மீட்க கோரி அவர்களது குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புயல்குறித்து அண்மையில் அரசு வெளியிட்டுள்ள பட்டியல் படி, 433 மீனவர்கள் மாயமாகி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடலில் மீன்பிடிக்க சென்று உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் விவசாயிகள், மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து தூத்தூரில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓகி புயலில் வீடு இழந்தவர் களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதனிடையே நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், உயிரிழந்த மீனவர்களுக்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் லட்சத்தீவு பகுதியில் மாயமான மீனவர்களை தேடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *