நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனை முடிவுக்கு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 450 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரரும், எஸ்.பி.கே குழும உரிமையாளருமான செய்யாதுரை வீட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவரது மகன் நாகராஜனுக்கு சொந்தமான அருப்புக்கோட்டை வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த 16ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை, நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில், 183 கோடி ரூபாய் ரொக்கம், 105 கிலோ தங்க கட்டிகள், 2 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 450 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்யாதுரை அவரது மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், அலுவலக பணியாளர்கள், ஆடிட்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அருப்புக்கோட்டையில் செய்யாதுரையின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், ஆவணங்கள் பற்றிய முழு விவரம் நாகராஜூக்கு மட்டுமே தெரியும் என்பதால், அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களையும், 4 பெட்டிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னைக்கு கொண்டு சென்றனர்.