உ.பி.யில் பாலியல் பலாத்காரத்துக்குப் பின் உயிருடன் எரிக்கப்பட்ட பெண்

உத்தரப் பிரதேசத்தில் 2 குழந்தைகளின் தாயை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கோவில் யாகசாலையில் வைத்து உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் 35 வயது பெண் ஒருவர், தமது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது கணவர் ஒரு கூலி வேலைக்காக காசியாபாத் சென்றிருந்தார். இதை அறிந்து கொண்ட 5 பேர் கும்பல், நேற்றிரவு 2 மணியளவில் அவரது வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கும்பல் சென்றதும், நடந்த விவரங்களை உறவினர் ஒருவரிடம் செல்போன் மூலம் அந்த பெண் கூறியுள்ளார். அந்த நேரத்தில் மீண்டும் அங்கு வந்த கும்பல், பெண்ணை இழுத்துச் சென்று அருகில் உள்ள கோவில் யாகசாலையில் தள்ளி தீவைத்து எரித்துவிட்டு, தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பெண்ணின் கணவர் புகார் அளித்ததன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்து வழக்கு பதிந்தனர்.

ஆராம் சிங், மகாவீர், சரண் சிங், குலு மற்றும் குமார் பால் ஆகிய இந்த 5 பேரும் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், கடந்த சில நாட்களாகவே இவர்கள் அந்தப் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *