இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று முதல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்கு என்பதை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை, இன்று முதல் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே, இரட்டை இலைச்சின்னம் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய, கூடுதல் அவகாசம் அளிக்க உத்தரவிடும்படி டிடிவி தினகரன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தி, தினகரனின் மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.