செல்போன்களில் சேமிக்கப்பட்டுள்ள உதவி எண்ணின் மூலம் ஆதார் தகவல்களை திருட முடியாது என ஆதார் அடையாள ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்களில், ஆதார் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் என 11 இலக்க எண் திடீரென தானாகவே பதிவானது. இது சர்ச்சையாக வெடித்த நிலையில், இதற்கு காரணம் தாங்கள்தான் என கூகுள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களுக்காக 2014 ஆம் ஆண்டு வழங்கிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளஆதார் அடையாள ஆணையம், ஆதாரின் பாதுகாப்பு குறித்த அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதார் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் மக்களுக்கு தேவையற்ற கால விரயம்தான் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் ஆன்ட்ராய்டு செல்போன்களில் பதியப்பட்டுள்ள 11 இலக்க எண்ணால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆதார் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.