அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 1-ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அனிதாவின் குடும்பத்தினரை அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தினகரன், அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் 15 லட்ச ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடனிருந்தார். அப்போது பேசிய டிடிவி தினகரன், அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு அனிதா குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கவில்லை எனக்கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்குப் பெறுவதே அனிதாவுக்கு நாம் செய்யும் மரியாதை என தெரிவித்தார்.