அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் 7 ஆண்டு சிறை…! அமலுக்கு வந்தது புதிய சட்டம்….

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் ஜூலை 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, லஞ்சம் கொடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த புதிய சட்டம் பாதுகாப்பையும் வழங்குகிறது.

அவர்கள்மீது லஞ்சக் குற்றச்சாட்டு எழும் பட்சத்தில், மேல் அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பின்னரே விசாரணை அதிகாரிகள் அவர்களை விசாரிக்கவோ, கைது செய்யவோ முடியும். அதே நேரத்தில் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என புதிய சட்டம் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கான தண்டனை 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைப்புகளும் இந்த சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  அதைப் போல, ஊழல் வழக்கு விசாரணையை 2 ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *