அமெரிக்காவின் சோனோமா பகுதியில் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அங்குள்ள பிரபலமான ஒயின் தயாரிப்பு ஆலைகளும், சில முக்கிய கட்டடங்களும் தீயில் சேதமடைந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை காட்டு தீ கபளீகரம் செய்திருப்பதால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. தீயில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளனர். 180 பேரின் கதி என்னவானது என தெரியவில்லை. இதைத்தொடர்ந்து, காட்டுத் தீயை தேசிய பேரழிவாக அறிவித்துள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், கலிபோர்னியா மாகாண அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
2017-10-13