அன்பால் உலகையே அரவணைத்த அன்னை தெரசாவின் நினைவு நாள்!

ஐரோப்பாவின் அல்பேனியாவில் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ல் பிறந்தவர் அன்னை தெரசா. இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட, தாயால் அன்பு பாராட்டி வளர்க்கப்பட்டார். அப்போது கிறிஸ்துவ மறைப் பணியாளர்களாலும், அவர்களின் சேவையாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். தனது 12வது வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்.

18வது முழு நேர சேவையில் ஈடுபட முடிவு செய்து, லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக சேர்ந்து கொண்டார். இந்த சகோதரிகள் இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கு சென்று, பின்னர் நாடு திரும்பினர். அப்போது இந்தியாவில் இருக்கும் ஏழ்மையை அறிந்து கொண்டு, அவர்களுக்காக உதவ தெரசா முன்வந்தார். அதன்படி, 1928ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார்.

1955ல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசிய குழந்தைகளுக்கு அடைக்கலம் தர ’சிசுபவன்’ இல்லத்தை தொடங்கினார். ’காந்தி பிரேம் நிவாஸ்’ என்ற பெயரில் தொழுநோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். இந்திய அரசின் பத்மஸ்ரீ, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.

1979ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். தொடர் உடல்நலக்குறைவு காரணமாக 1997ல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். அதே ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி காலமானார். அன்னைப் போன்று அனைவரையும் பாசக்கரம் நீட்டி அரவணைத்ததால், அன்னை தெரசா என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *