அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 10ம் தேதியன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் இல்லை எனவும், தமிழகத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஎஸ்இயை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் மோகன் சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான நீட் தேர்வு இணை இயக்குனர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டும் என நீட் ஆலோசனை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இணை இயக்குனரின் தகவல் பதிவு செய்யப்படுவதாகவும், ஒரே மாதிரியான வினாத்தாள் தொடர்பான மனுக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.