ஃபேஷன் ஷோவில் கலக்கிய மீன் விற்று படிக்கும் ’அரசின் மகள்’!

மீன் விற்று கஷ்டப்பட்டு கல்லூரியில் படிக்கும் கேரள மாணவி, காதி வாரியம் நடத்திய பேஷன் ஷோவில் கலந்து கொண்டு  பார்வையாளர் களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் ஹமீது. (21) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படிக்கிறார். இவரது தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். தாயாருக்கு மனநிலை சரியில்லை. இதன் காரணமாக, மாலை நேரத்தில் மீன் விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் ஹனன். அவரது வாழ்க்கை குறித்து கேரளாவின் ’மாத்ருபூமி’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே யாரிடமும் உதவி கேட்காமல், படித்துக்கொண்டே உழைக்கும் ஹனனின் கதையை படித்த பலருக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது.

சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். இயக்குனர் அருண் கோபி, அவருக்கு நடிக்க வாய்ப்பளிக்கப் போவதாக அறிவித்தார். இந்தக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் ஹனனின் தன்னம்பிக்கைக் குறித்து பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் இது பொய் என்றும், பணம் பறிப்பதற்காக இவர் இப்படி செய்வதாகவும் சிலர் கிண்டலடித்து கருத்து பதிவிட்டிருந்தனர். அவர் தொடர்பாக மோசமான வதந்திகளையும் பரப்பினர். இந்நிலையில் அவர் படிக்கும் கல்லூரி முதல்வரும், அவரது நண்பர்களும் ஹனன் கதை உண்மையானதுதான் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், தனது முகநூல் பக்கத்தில், இச்சம்பவம் குறித்து உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். கிண்டல் செய்வதை அவர் வன்மையாகக் கண்டித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து பேசிய ஹனன், ‘எனக்கு எந்த உதவியும் வேண்டாம். என்னால் இயன்ற வேலையை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று வருத்தத்துடன் கூறினார்.

இந்நிலையில் இந்தச் செய்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரியவந்தது. அவர், ஹனனை கிண்டல் செய்தவர்களுக்கு கடும் கண்டனத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். ‘ஹனனின் செயலை கண்டு பெருமை பட வேண்டும். அவர் தன்னை மட்டுமல்ல, பல்வேறு வேலைகள் செய்து படித்துக்கொண்டே குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை கதையை கேட்டு பெருமையாக உணர்ந்தேன். அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவருக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக் க உத்தரவிட்டுள்ளேன். அவரை கிண்டல் செய்வது கண்டனதுக்குரியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட் டுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஹனன் பற்றி சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்த வயநாடு பகுதியைச் சேர்ந்த நூருதீன் ஷேக் குருவாயூரைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, தனக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கண்ணீரோடு ஹனன் நேற்று நன்றி தெரிவித்தார்.  அப்போது முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, ”ஹனனுக்குத் தேவையான அனைத்து வகையான ஆதரவையும் நான் அளிப்பேன்’ என்றார்.

இதையடுத்து ஹனன் கூறும்போது, ‘நான் இந்த அரசின் மகள். முதல்வர் பினராயி விஜயன் எனக்கு ஒரு தந்தையைப் போல் ஆதரவையும், பாதுகாப்பையும் அளிப்பதாக உறுதியளித்தார்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையடுத்து கேரள காதி வாரியம், ’ஓணம்-பக்ரீத் காதி விழா’வை நேற்று நடத்தியது. இதில் நடந்த பேஷன் ஷோவில் காதியின் விதவிதமான உடைகளை அணிந்து ஹனன் பூனை நடந்தார். முதலில் அவரை அடையாளம் தெரியாத பர்வையாளர்கள் பின்னர் தெரிந்துகொண்டதும் பலத்த கைதட்டி வரவேற்பை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *