உலக குத்துச்சண்டை மகளிர் சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று இந்தியாவின் மேரி கோம் சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் உக்ரைனின் ஹன்னா ஒஹட்டாவை, மேரி கோம் எதிர்கொண்டார். இதில் 5க்கு0 என்ற கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் ஆறாவது உலக சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கினார். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் மேரி கோம் படைத்துள்ளார். இந்த வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக மேரி கோம் தெரிவித்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.