ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அடிலெய்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் 235 ரன்களில் சுருட்டினர்.
முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுலும் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் செட்டீஸ்வர் புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர். 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி அவுட்டாகவே சிறிது நேரத்தில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
புஜாராவும், ரகானேவும் களத்தில் உள்ளனர். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 151 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலையை சேர்த்து தற்போது இந்தியா 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது.