அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்… அபார வெற்றிபெற்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 307 ரன்களும் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, முன்னணி விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. ஆரன் பிஞ்ச், ஹார்ரிஸ், குவாஜா, ஹேண்ட்ஸ் ஹோம்ப் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நேற்று நான்காம் நாள் ஆட்டநேர முடிவின் படி அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ட்ராவிஸ் ஹெட் அவுட்டானார். சான் மார்ஷ் 60 ரன்களும், பெயின் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. பூம்ரா, அஸ்வின், முகமது சமியின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பூம்ரா, முகமது சமி, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *