கரையைக் கடந்த டிட்லி புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லையென்றும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையுமென்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள வானிலை மையம், வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லையென்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில் 5 செ.மீ, அரியலூர், திருவள்ளூர், முத்துப்பேட்டை, தஞ்சை, மதுக்கூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.