நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கூலி உயர்வை உடனே வழங்கக் கோரி, விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் 30 ஆயிரம் விசைத்தறிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கூலி உயர்வு கோரி இத்தொழிலாளர்கள் 2014ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கூடி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 20 சதவீத கூலி உயர்வு வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
முன்பு போடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், ஒப்பந்த காலத்தில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.