சேலம் அருகே கடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் தஞ்சாவூரில் மீட்பு

சேலம் அருகே கடத்தப்பட்ட பள்ளி ஆசிரியர், தஞ்சாவூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

முத்தம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், வாழப்பாடி அருகே வைகை மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நேற்று மாலை நண்பர்களை பார்த்து வருவதாக அனுமதி பெற்றுச் சென்ற அவர், மீண்டும் பள்ளி திரும்பாததால் அவரது தந்தை ராஜேந்திரனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்றிரவு ராஜேந்திரனுடன் செல்போனில் பேசிய நபர், மணிகண்டனை தாங்கள் கடத்தியிருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் தர வேண்டுமெனவும் மிரட்டியுள்ளான்.

புகாரின்பேரில், வாழப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் வந்த செல்போன் எண்ணின் டவர், தஞ்சாவூரைக் காட்டியது. இந்நிலையில், ராஜேந்திரனிடம் பேசிய கடத்தல் கும்பல் தஞ்சாவூருக்கு பணத்துடன் வருமாறு கூற, ராஜேந்திரனுடன் போலீசாரும் பின்தொடர்ந்தனர். அங்கு ஒரு காரில் இருந்த 3 பேரிடம் பணத்தை கொடுத்தபோது, போலீசார் சுற்றிவளைத்தனர். மணிகண்டனை விட்டு விட்டு தப்பிய அவர்களில் ஒருவன் பிடிபட்டான். விசாரணையில் கடத்தல்காரர்கள் வாழப்பாடி மற்றும் முத்தம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *