கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதியின் இல்லற வாழ்விற்கு பரோல் வழங்கி உத்தரவு

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள  கைதியின் இல்லற வாழ்விற்காக இரண்டு வாரம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த முத்துமாரி என்பவரின் ஆட்கொணர்வு மனுவில் தனது கணவர் பெருமாள் கொலைவழக்கில் ஆயுள் கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு வார பரோல் காலத்தில் தங்கள் திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது தங்கள் இல்லற வாழ்வை தொடர இரண்டு மாத பரோல் கோரி சிறை கண்காணிப்பாளரிடம் தான் அளித்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

மனு விசாரணைக்கு வந்த போது பெருமாளுக்கு எதிராக மேலும் 2 கொலை வழக்குகள் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவருக்கு பரோல் வழங்கக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இல்லற வாழ்வை தொடர அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிமை இருப்பதாக மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், டிசம்பர் 15 முதல் 29 வரை இரண்டு வார பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த இரண்டு வார காலத்திற்கு அவருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள்  உத்தரவை அமல்படுத்தி அது குறித்த அறிக்கையை ஜனவரி 2-ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *