குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் கொடி ஏற்றினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றியபோது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. முதல்வர் பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடன் உள்ளனர். இதனை தொடர்ந்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலாலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசு தின விழா விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். குடியரசு தின விழாவையொட்டி மெரினா கடற்கரை முழுவதும பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நேற்றிரவு முதல் இன்று நிகழ்ச்சி முடியும் வரை மெரினா கடற்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் சென்னை முழுவதும், 15 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

2019ம் ஆண்டின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையை சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. வேளாண் துறை சிறப்பு விருது புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேவியருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. அண்ணா பதக்கம் பெறும் 3 பேருக்கும், ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழை விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மொழி, வீர தீரத்தை பறைசாற்றும் வகையில் இசையுடன் கூடிய நிகழ்ச்சிகளை பொதுமக்களும் கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *