ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017 செப்டம்பர் 25 ம் தேதி அமைக்கப்பட்ட, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. முதன்முறையாக ஆறுமாதமும், அதன் பின்பு இரு முறை தலா 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

3ஆவது முறையாக வழங்கிய காலநீடிப்பு, முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், மேலும் 4 மாதம் காலநீட்டிப்பு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி, தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில், காலநீட்டிப்பு கேட்டு அரசுக்கு, ஆணையம் கடிதம் எழுதிய நிலையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *