தஞ்சாவூர் மாவட்டம் மேலஉழூரில் கல்யாண ஓடைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறுவதால் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் மேலஉழூரில் கல்லணைக் கால்வாயின் கிளைக்கால்வாயான கல்யாண ஓடை உள்ளது. இந்த ஓடையில் பாசனத்துக்காகத் தண்ணீர் சென்றுகொண்டுள்ள நிலையில் ஓரிடத்தில் மரம் சாய்ந்ததால் கரை உடைந்து அந்த வழியாகத் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால் மேலஉழூர், பரிதியப்பர் கோவில், கண்ணந்தங்குடி, தும்பச்சிக்கோட்டை, பொன்னாப்பூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஊர்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
உடைப்பு வழியாகப் பாயும் தண்ணீர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பாய்வதால் அந்த வழியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கரையை அடைப்பதற்கான மணல் மூட்டைகள், சவுக்குக் கம்புகள் ஆகியன கொண்டுவரப்பட்டுள்ளன. தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையின் 36வீரர்களுடன் வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கால்வாயில் தண்ணீரை நிறுத்தியபின்பே கரையை அடைக்கும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.