மக்களின் வரிப்பணம் கொள்ளைப் போவதை கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் தடுத்து நிறுத்தியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பின்னர், இந்தியாவின் வளர்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களுக்காக அரசு செலவிடப்படும் ஒரு ரூபாயில் 85 காசுகள் மட்டுமே மக்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதை சுட்டிக்காட்டினார்.
ராஜீவ்காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி, மக்களின் வரிப்பணம் வீணாவதையும், கொள்ளை அடிக்கப்படுவதையும் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சித்தார். ஆனால், பாஜக அரசு, பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
7 கோடி பேர் போலியான ஆவணங்களை வைத்துக் கொண்டு, அரசு திட்டங்களின் மூலம் பயன் அடைந்திருப்பதாகவும், அதை எவ்வித உள்நோக்கமும் இன்றி மத்திய அரசு தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலக அளவில் பல துறைகளில் இந்தியா முன்னோடியாக இருப்பதாக கூறிய மோடி, சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பு மூலம் ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.
பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை விரைந்து பெற, உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களோடு, பாஸ்போஸ்ட் சேவா திட்டம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். தற்போது மற்றொரு திட்டமாக, மின்னணு பாஸ்போர்ட் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.