நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருடன் டெல்லியில் இருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக டெல்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் நடத்த தேவைப்படும் நிதி ஆதாரம், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார்.

தமிழ்நாட்டை பொருத்தவரை நிதி ஆதாரத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைச்சீட்டு அளிக்கும் வி.வி.எம்.பேட் இயந்திரம் 100 சதவீதம் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள், தேர்தல் விதிமுறை அமலாகுவதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலோடு, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் சத்யபிரதாசாஹு தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் தேதியை நிர்ணயிக்கும் வரை, இறுதி வாக்காளர் பட்டியலில் கூட திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *