எரிக்சன் நிறுவனத்திற்கு 550 கோடி ரூபாயை செலுத்தாத நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராக தீர்ப்பு…

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், 4 வாரத்தில் 453 கோடி ரூபாயை அந்நிறுவனத்திற்கு வழங்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் தங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்று கூறி, ஸ்வீடனை சேர்ந்த எரிக்சன் என்ற தொலை தொடர்பு நிறுவனம் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் அனில் அம்பானி நிறுவனம் 550 கோடி ரூபாயை கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு வழங்க தாமதம் ஏற்பட்டால் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் 550 கோடி ரூபாயை அனில் அம்பானி நிறுவனம் வழங்கவில்லை என்று கூறி எரிக்சன் நிறுவனம் அனில் அம்பானி மற்றும் இயக்குநர்களான ரிலையன்ஸ் டெலிகாம் தலைவர் சதிஷ் சேத், ரிலையன்ஸ் இன்பிரா டெல் தலைவர் சாயா விரானி ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கின் விசாரணையின் போது ரபேல் ஒப்பந்தத்தில் முதலீடு செய்ய மட்டும் அனில் அம்பானிக்கு பணம் இருக்கிறது ஆனால், தங்களுக்கு தர முடியவில்லை என்று எரிக்சன் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேசன் சொத்துக்களை முகேஷ் அம்பானி நிறுவனத்திற்கு விற்கும் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக அனில் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் ஆர் எப் நாரிமன், வினீத் சரன் ஆகியோர் கடந்த 13 ஆம் தேதி அறிவித்தனர்.

 இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் எரிக்சன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாயை 4 வாரத்தில் அனில் அம்பானி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்க தவறினால் அனில் அம்பானி மற்றும் இயக்குநர்கள் 2 பேருக்கும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனில் அம்பானியின் நிபந்தனையற்ற மன்னிப்பையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், 3 பேருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தனர். ஒரு மாதத்திற்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி இருக்கும் அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *