ஆதாரை வைத்து இப்படியும் திருடலாம்!

ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்ததில் இருந்து, அதன் பயன்பாடுகள் அதிகரித்ததை விட அதன்மீதான செய்திகள்தான் அதிகரித்திருக்கின்றன. அந்த வகையில், ஆதார் அட்டையில் இறந்த ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்கள் வாங்கிக் குவித்த ஒருவர், தான் திருடிய முறை குறித்து அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பகுதி கோடா. இங்கு இணையதள வடிமைப்பாளராக பணியாற்றி வருபவர் தருண் சுரேஜா. சமீபத்தில் ஆன்லைன் மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தருண் அளித்த வாக்குமூலம் இதோ..

‘கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய செல்போன் எண் வாங்கினேன். சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தபோது, அங்கு ஒரு நிறுவனத்தில் பெயர் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்து கிரெடிட் கார்ட் வாங்கலாம் என்ற விளம்பரம் இருந்தது. என் செல்போன் நம்பரைப் பதிவு செய்தபோது, அதில் என் பெயருக்குப் பதிலாக அஜய் ரதோட் என்பவரின் பெயர் வந்தது. கிரெடிட் கார்ட் மூலமாக வாங்கும் பொருட்கள் சம்மந்தப்பட்டவரின் முகவரிக்கு வரும் என்பதால், எனது ஆதார் அட்டையின் பி.டி.எஃப். (PDF) எடுத்து அதில் அஜய் ரதோட் என பெயரை மாற்றிக்கொண்டேன். நான் வாடகை வீட்டில் குடியிருப்பதால், முகவரி சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்ற பிரச்சனையும் எனக்கில்லை. இதன்மூலம், இதுவரை ரூ.1.67 லட்சத்திற்கும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி, அதை நல்ல விலைக்கு விற்று வந்தேன்’ என அவர் விவரித்திருக்கிறார்.

அஜய் ரத்தோட் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்தவர். அவரது செல்போன் எண், அவரது மரணத்திற்குப் பிறகு தருண் சுரேஜாவிற்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் இந்தத் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இறந்த ஒருவரின் பெயரில் ஆதார் உருவாக்கி, அதன் மூலம் பொருட்கள் வாங்கினால், அதற்கான தவணை விவரங்கள் அந்த நபரின் பெயருக்குத்தான் வரும். இதன்மூலம் நீண்ட நாட்கள் மாட்டிக்கொள்ளாமல் லாபம் பார்க்கலாம் என்று நினைத்த சுரேஜாவை மூன்றே மாதங்களில் கைது செய்திருக்கிறது காவல்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *